இசையமைப்பாளர் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு பேசியதாக, திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து புகார் அளித்துள்ளார்.

அதில், “கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் “Chai with chithra” என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குநருமான ரத்னகுமார் கலந்துக் கொண்டார். அதில் இசைஞானி இளையரஜாவை அவரது ஜாதியை மையமாக வைத்து இழிவாக பேசினார் ரத்னகுமார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதனால் மீண்டும் புகார் அளித்துள்ளோம்.என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.