சென்னை:  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு இன்று (4-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.

15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு,  மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.