இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’.

இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும் ஓரின மற்றும் பாலின பாகுபாடற்ற இன சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று உள்ளது.

 

இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதோடு அவரை கைது செய்யவேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை.

இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றதோடு பல விருதுகளும் கிடைத்துள்ளன.

கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் காளி போஸ்டர் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள லீனா மணிமேகலை, “ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என லீனா குறிப்பிட்டுள்ளார்.