நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டடங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நெல்லை செல்கிறார்.


தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த  பேய்மழையின் காரணமாகக் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்,  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அரசு அனுப்பிய குழுவினர், நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றனர்.

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார். இன்று காலை,  சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்.