சென்னை: ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பிரபல பகுதியான அண்ணாநகர் திருமங்கலம் ஏரியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியரான மதிவாணன் என்பவர்,  ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ தொடர்பான லிங்கை மாணவிகளுக்கு வாட்சம் மூலம்  அனுப்பி உள்ளார்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், கணித ஆசிரியர் மதிவாணனிடம் பள்ளி நிர்வாகம் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஆபாச வீடியோ லிங்க்-ஐ வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி அடிப்படையில் காவல்துறையினர் கணித ஆசிரியர் மதிவாணனை கைது செய்தனர். மதிவாணன் சென்னை அம்பத்தூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.