சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்னும் ஒருவாரத்தில் ஆற்காடு சாலை சீரமைப்பு பணிகள் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்,

”கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்யும் மழையாலும், பிறதுறைகளின் பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடை நீரை சென்னைபெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து ஆழ்துளையில் நிரம்பி வரும் தண்ணீரைச் சுத்தம் செய்து வருகின்றன.

மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரமைப்புப் பணிகளையும், மெட்ரோ ரெயில் தூண் பணிகள் முடிவடைந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளார். இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.