சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது. இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தது.

இந்நிலையில், ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவதாகவும், இதுநாள்வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11 வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 90 சதவீத விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டதாகவும்,100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆணையின் விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.