சென்னை

வெளிநாட்டு நாய்களை வர்த்தக பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த மத்திய அரசின் உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்யத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், சென்னை கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்கள், “வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என்று எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளிவிவரங்களும் இல்லாத நிலையில் இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் தமது உத்தரவில்,

“வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை.இந்திய நாய்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்துத்தான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதில்லை. அதேசமயம், வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்”

எனக் கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்துள்ளார்.