திருவாரூர்

ரூ.5 கோடி செலவில் திருவாரூர் அருகே தாஜ்மகால் வடிவமைப்பில் ஒருவர் தனது தாய்க்கு நினைவு இல்லம் கட்டி உள்ளார்.

திருவாரூருக்கு அருகில் உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், அம்ருதீன் ஷேக் தாவூது என்ற மகனும் உள்ளனர். சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்த அப்துல் காதர். குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே உயிரிழந்துவிட்டதால், தாய் ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்து, தனது குழந்தைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்துவைத்து, நல்ல நிலைக்கு உயர்த்தினார்.

அம்ருதீன் ஷேக் தாவூது, பி ஏ முடித்து விட்டு சென்னையில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  கடந்த 2020-ம் ஆண்டு தனது ௭௨ஆம்வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையொட்டி, காதலியின் மீதான அன்பை வெளிப்படுத்த ஆக்ராவில் ஷாஜகான் கட்டியெழுப்பிய தாஜ்மஹாலைப் போன்று, தனது தாய் மீதான அன்பின் அடையாளமாக அம்மையப்பன் பகுதியில் ஒரு நினைவிடம் கட்ட அம்ருதீன் ஷேக் தாவூது முடிவு செய்தார்.

திருச்சியை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் ஒருவரின் வழிகாட்டலில், ராஜஸ்தானில் இருந்து பளிங்குக் கற்களை வாங்கி வந்து, அங்குள்ள தொழிலாளர்களையும் அம்மையப்பன் பகுதியில் உள்ள தொழிலாளர்களையும் பணியில் ஈடுபடுத்தி, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லத்தைக் கட்டியுள்ளார். இங்கு ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த நினைவு இல்லத் திறப்புவிழா நடைபெற்று, பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த மதங்களைக் கடந்து அன்பை நேசிக்கும் நினைவு இல்லத்தைப் பலர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இங்கு 5 வேளை தொழுகை நடத்திக்கொள்ளும் வகையில் மதரஸாவும் அமைக்கப்பட்டுள்ளது.