சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. 

அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவரான ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“பாஜகவுக்கு. தேசிய மலரான தாமரையைக் கட்சியின் சின்னமாக ஒதுக்கியது அநீதி ஆகும். நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது போல  இது உள்ளதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினோம்.  ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் என் மனுவை பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’

என்று கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இந்த வ்ழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில்,

“தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும், தாமரையை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. அதனால், தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும்”

என்று வாதிடப்பட்டது.

இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இன்று பாஜகவின் சின்னமாகத் தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரத்தைச் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்குச் செலுத்தவும், மீதித் தொகையை மனுதாரர் பெற்றுக்கொள்ளவும் அனுமதியளித்து தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.