சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளது.

நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.. சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

சுசித்ராவின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  அவர் மேலும் நடிகர் தனுஷும் கார்த்திக் குமாரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்றும் கூறியதுடன் தனது வெறொரு நேர்காணலில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தனக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார்.

பாடகி சுசித்ராவின் இந்தப் பேட்டி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும் தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “மனுதாரரான கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவி்க்கக் கூடாது” என பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த மனுவுக்கு சுசித்ரா பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.