சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரித் தேர்தல் ஆணையத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ம.தி.மு.க.வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  எனவே பம்பரம் சின்னம் பொது சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்திருந்தனர்.

வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தரப்பில், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டுச் சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே பம்பரம் சின்னம் கோரி ம.தி.மு.க. அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.