பெங்களூரு

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பெங்களூருவில் இது குறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும், நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு பொய் சொல்வதாகவும் கூறினார்.

முதல்வர் சித்தராமையா இதற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசின் திட்டங்களுக்கு அவர்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்கக்கூடாது என்றும் எஜமானர் தோரணையுடன் கூறியுள்ள கருத்தை நான் கண்டிக்கிறேன். அவரது கருத்து கன்னட மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். ஏதாவது செய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உத்தரவாத திட்டங்களை நிறுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். 

இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்குத் தக்க பாடத்தைப் புகட்ட உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் மாநில அரசின் பரிந்துரைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார். இதன் மூலம் அவர் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்துள்ளார்” 

என்று கூறியுள்ளார்.