சென்னை:

நாடு முழுவதும் இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம் காட்டி வரும் மத்தியஅரசு, தற்போது  கல்லூரி படிப்பிலும்  இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, மத்திய அரசின் சுற்றறிக்கையை தீயிட்டு கொளுத்தினர்.

நாடு முழுவதும்  இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இந்திய மொழி கட்டாயம் என மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்திருந்த நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தன.

இதன் காரணமாக சற்று பின்வாங்கிய மோடி அரசு, தற்போது இந்தி கட்டாயம் என்பதை கல்லூரி படிப்புகளில் இணைக்க முயற்சி செய்து வருகிறது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு  அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,  இளங்கலை பட்டம் பெற வேண்டுமென்றால் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டுமென்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. கல்லூரி இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதற்கு தமிழகம் உள்பட பல மாநிங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்திய நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்  போராட்டம் நடத்தியதோடு, சுற்றறிக்கையை தீயிட்டுக் கொளுத்தினர்.

கல்லூரிகளில் இந்தி திணிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், யு.ஜி.சி. செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அளித்துள்ள விளக்கத்தில்,  அந்த கடிதம், கருத்து கேட்பதற்காக சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கட்டாய உத்தரவு அல்ல. இந்தியை கட்டாய பாடம் ஆக்க முடியுமா என்று மத்திய மந்திரி கேட்டதால், கருத்து கேட்பதற்காக மட்டுமே அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.