பெங்களூரு

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா ஜாக்சன் – மிதுன் சக்ரவர்த்தி

கோயம்புத்தூரில் உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி ஆர் எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  அந்த மாணவி கடந்த வியாழன் அன்று மாலை தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டினர்.  மாணவி இது தொடர்பாக எழுதிய கடிதம்  கிடைத்ததால் ஆர் எஸ் புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளன

ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவாகி விட்டார்.  அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.   பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த தனிப்படையினர் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட உள்ளார்.