சென்னை: மத்தியஅரசு தமிழகத்தக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை, உடனே வழங்க, மத்தியஅரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி.சுந்தரராஜன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள  மனுவில்,  மத்திய அரசு நேரடியாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கும்போது, அதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய ஜிஎஸ்டி இழப்பீடு சட்டத்தையும் இயற்றியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மாநிலஅரசுகளின் வருவாய் இழப்பை சரிசெய்யும் விதமாக இந்த இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கும். அதன்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை எனவும், நிதியாண்டின் இறுதியிலும் வருவாய் இழப்பை கணக்கிட்டு, இழப்பீட்டு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதிக அளவிலான தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பது, தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை பாதிக்கும். மேலும் இது அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. எனவே ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.