தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நாளை காலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

சென்னையில் இன்று அதிகாலை 6:10 மணிக்கு மரணமடைந்த விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் நாளை காலை 6 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை வைக்கப்படும் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீவுத்திடலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அந்த வளாகத்தில் அவரது உடல் மாலை 4:45 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.