சென்னை:  தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வரும் 9ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது.

போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு ஆண்டுகளாக திமுக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவது இல்லை என்று குற்றம் சாட்டி உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கப்போவதாக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியது. அதில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

அதைத்தொடர்ந்து, ஜனவரி 3ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் கம்யூனிஸ்டு தலைவர் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு,  ஆர்.ஆறுமுகம், டி.திருமலைசாமி, பாலன், கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை  மாலை 4மணி அளவில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு  தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார்.  சுமார்  2மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறத. இதற்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களும்  பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தையில், அரசு தரப்பில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும்,  மேலும், இந்த கோரிக்கைகள் தொடர்பாகபொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பிரச்சினைகளை தீர்க்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது. ஆனால், இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர்,  பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக   அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய , அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள்  ஜன.9-ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக  அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்கள் சார்பாக  சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன் கூறும்போது, “பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்சினைக்காவது தீர்வுகாண வேண்டும் என்றபோதும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வரும் 9-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது எனமுடிவு செய்துள்ளோம். அதிமுகவின் தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சிஐடியு உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தத்தை நடத்த இருக்கிறோம். தொமுச தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்” என்றார்.