சென்னை: ஊழல் வழக்கில், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் செல்வம்.  இவர் மீது ஊழல், மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் அவருக்கு சொந்தமான ரூ. 4.71 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் ரூ.1.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள், மற்றும் ரூ.3.59 கோடி கணக்கில் வராத பணம்,மற்றும் தங்க காசுகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் பன்னீர்செல்வதுக்கு  சொந்தமான இடங்களில்  லஞ்ச ஒழிப்புதுதறை  சோதனை நடத்தியது. இவர்மீது,  மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் கோப்புகள் மீது கையெழுத்திட லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், வேலூர் லஞ்சஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான குழுவினர் பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டில்  நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் காலை சோதனையை தொடங்கினர். அப்போது, மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.25கோடி ரொக்கம், 3.60 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90அசையா சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.  பின்னர் இதுகுறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து, அவர்மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.