சென்னை:  பிராட்வேயில் 9 மாடி வணிக வளாகத்துடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ள நிலையில், தற்காலிகமாக பிராட்வே பேருந்து நிலையம்  தீவுத்திடலுக்கு மாற்றம்  செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பாரிமுனையில் (பிராட்வே) 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பஸ் நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 9 மாடி கட்டிடத்துடன் கூடிய பேருந்து நிலையம் தொடர்பான மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டது.

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு வரை மாவட்ட பஸ்கள் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டன. இதனையடுத்து பிராட்வேயில் இருந்து மாநகர பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

பழமையான இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பஸ் நிலையம் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பஸ் நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.அதன்பிறகு பிராட்வே பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.

பிராட்வே பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 4 மாடல்கள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.  இதற்காக குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இது போக அண்ணாநகர் (மேற்கு), கே.கே.நகர் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனம யமாக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.