கிருஷ்ணகிரி: பாஜகவுடன் உறவு முறிவு, அண்ணாமலை மாற்ற கோரிக்கை விடப்பட்டதா, பிரதமர் வேட்பாளர் யார்,  2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார்? போன்ற செய்தியாளர்களின் பரபரப்பான கேள்விகளுக்கு அதிமுக துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

2024மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று கூறிய அதிமுக எம்எல்ஏ மற்றும் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்றும், ‘2026ல் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்றும் கூறினார்.

கிருஷ்ணகிரியில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி,  செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது “அதிமுக தலைவர்கள் பற்றி  பாஜகவினர் கடுமையான விமர்சனம் செய்தார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம். உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததால் தொண்டர்கள் கோபமடைந்தனர். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்ட செயலாளர்கள் எடுத்துரைத்தனர். பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று கூறிய கே.பி.முனுசாமி, தேர்தல் வந்தால் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்துவிடும் என கூறுவது நடக்காது என  கூறியதுடன், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்  என்றார்.

அதையடுத்து, அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவினர் போஸ்டர் அடித்ததால், கூட்டணி முறிவா என்ற கேள்விக்கு, அதெல்லாம் இல்லை என்றவர்,’2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

ஆனால், தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகவுடனான அதிமுக கூட்டணி சேரும் என்று மு.க.ஸ்டாலின், உதயநிதி கூறி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய பயத்தில் திமுகவினர் பேசி வருகின்றனர். கூட்டணி முடிவை அறிவித்த உடன் திமுக தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து பேசுவது பயத்தின் வெளிபாடு. எந்த காரணத்திற்காகவும் பாஜகவுடனான கூட்டணி ஒருபோதும் இருக்காது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்” என்றார்.

பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பதில் சொல்ல மறுக்கிறாரே என்ற கேள்விக்கு,  காலம் வரும்போது இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறுவார் என்ற முனுசாமி, அதிமுக என்பது ஜனநாயக இயக்கம், பொதுச்செயலாளரின் கருத்தையே நான் கூறுகிறேன் என்றார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற கூறியது உண்மையா? என்ற கேள்விக்கு, அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை என்ற முனுசாமி, அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை. நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். முதிர்ந்த ஒரு அரசியல் கட்சி எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கேட்காது” என்றதுடன்,  ஒரு கட்சியின் மாநில தலைவரை  நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுப்பிள்ளைதனமான கேள்வியாக நினைக்கிறேன் என்றார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணி சார் யார் பிரதமர் வேட்பாளர்?  என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூற திணறிய  முனுசாமி மழுப்பலாக பதில் கூறினார். அப்போது, ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாய்க் எந்த கட்சியையோ, பிரதமர் வேட்பாளரையோ ஆதரிப்பதில்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்” தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முனுசாமி மக்களை நலனை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.

”எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இருக்காது. 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் மட்டுமின்றி, 2026ல் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்காது. இந்த இரண்டு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்றார் முனுசாமி. இதனை தொடர்ந்து, “மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மாநில உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

இவ்வாறு கூறினார்.