சென்னை: பாஜக அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியதுடன், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்புகொடி காட்டுவோம் என்றும் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியுன் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்  செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மத்தியில், பாஜக ஆட்சி வந்ததில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்து வந்த மீனவர்களால் அந்த தொழிலை சரியாக செய்ய முடியவில்லை. அண்டை நாடுகள் தமிழ்நாட்டு மீனவர்களை குறி வைத்து தாக்குகின்றன. குறிப்பாக இலங்கை அரசாங்கம் படகை பிடிப்பது, வலையை கிழிப்பது அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படை இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 600 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே பாஜக அரசு ஜாயிண்ட் ஒர்க்கிங் கமிட்டி அமைப்பதாக சொன்னார்கள், ஏன் இன்னும் அதை செய்யவில்லை. பாஜக அரசுக்கு மீனவர்கள் மீது அக்கறை இல்லை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

10 ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசு என்ன செய்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் தோல்வி அடைந்துள்ளது. பாஜக அரசு மீனவர்களை முற்றிலும் கைவிட்டு விட்டது. இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. இதுதொடர்பாக   கடலில் இறங்கி பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப உள்ளோம். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் அன்று கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கூட்டணி தொடர்பான கேள்விக்கு,  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை திமுகவுடன்  சமூகமாக நடந்து வருகிறது. எங்கள் தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர் என்றார். திமுகவுடன் நல்ல நட்புடன் உள்ளோம். மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் காங்கிரசுடன் இருப்பார்கள். ”காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே விரைவில்  தமிழ்நாடு வருவார் என்றும் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, விவசாய பெருமக்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைப்போம் என்றார்கள். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள், கொடுத்தார்களா?  என கேள்வி எழுப்பினார்.

இன்று மதியம் டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.