நானும் ரவுடிதான் என்று திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு செய்யும் காமெடி காட்சியை மிஞ்சும் அளவில், சென்னை வெள்ளத்தில் மக்களை சந்திக்க படகில் செல்வதுபோல போட்டோ ஷூட் நடத்தி அலப்பறை தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை ஐபிஎஸ்-ன் மட்டரகமான அரசியலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் உள்பட, முக்கிய வியாபார ஸ்தலமான தி.நகர் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. எங்கு நோக்கிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழைநீரை எங்கு வெளியேற்றுவது என புரியாமலும், தண்ணீரை  வெளியேற்ற முடியாமலும் அதிகாரிகளும், மீட்பு படையினரும் தவித்து வருகின்றனர். மேலும் மழைநீரில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று 3வது நாளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அதுபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னையின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில், அதிரடி அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மழைநீர் தேங்கியுள்ள பகுதியில், பாஜக பிரமுகர் கரு. நாகராஜனுடன் படகில் ஏறி அமர்ந்துகொண்டு, போட்டோ மற்றும் வீடியோ ஷூட் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நானும் ரவுடிதான் என கூறி, காவல்துறையின் வாகனத்தில் தானாகவே ஏறிச்செல்லும் நடிகர் வடிவேலுவின் காமடியை நினைவுகூறும் வகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதுபோல ஒரு வாடகை படகை எடுத்துக்கொண்டு, மழைநீர் தேங்கி உள்ள கொளத்தூர் பகுதிக்கு சென்று, அதில் அவரும், கரு.நாகராஜனும் ஏறிக்கொண்டு, படகை தள்ளும் மற்றவர்களை விலகி செல்லும்படி கூறி, இருவரும் படகோட்டியுடன் தனியாக ஆய்வு செய்வதுபோல ஷூட்டிங் நடத்தியது கேலிக்குரியாதாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கிச்சென்று உதவி செய்யாமல், படகில் அமர்ந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுததி உள்ளது.

தொடர்மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மக்கள், அடுத்த 3 நாட்கள் கனமழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எண்ணி கலங்கி நிற்கும் வேளையில், பாஜக தலைவர்  அண்ணாமலையின் அலப்பறையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்ணாமலையின் அட்றாசிட்டி அரசியல் அலப்பறையை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்