சிவகங்கை: அதிமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு பின்னர் 20 தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில்  காரைக்குடி தொகுதியும் ஒன்று. இங்கு பாஜக சார்பில்,  எச்.ராஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  பாஜக நிர்வாகிகள் கூட்டம் , தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில், பாஜகவினர் மட்டுமின்றி அதிமுகவினரும் கலந்துகொண்டனர். தேர்தலில் எச்.ராஜா வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள், பிரசாரங்கள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிடி.ரவி,  காங்கிரஸ், திமுக  போன்ற கட்சிகள் தமிழக மக்களுக்கு எதிரானது என குற்றம் சாட்டியவர், எச்.ராஜா வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர், செய்தியளார்கள் அவரிடம் எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருவமான வரித்துறை சோதனை நடைபெறுகிறதே என்றதற்கு,  வருமான வரித்துறைக்கு அதிமுக, திமுக, பாஜக என்ற பாகுபாடு கிடையாது யாரிடம் கருப்பு பணம் இருந்தாலும் அவர்கள் வீடுகளில் சோதனை நடக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும்,  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் அதிமுக அமைச்சரவையில் பாஜக சேருமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், தேர்தல் முடிவுக்கு பிறகுதான் அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவது குறித்து முடிவு செய்வோம் எனக் கூறினார்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.