ராணிப்பேட்டை

பாஜக தமிழகத்தில் காலூன்றச் செய்து வரும் முயற்சிகள் பலிக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   அவ்வகையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  நேற்று அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அவர் தனது பரப்புரையில், “இதுவரை அணைக்கட்டு தொகுதி மக்களின் கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றையாவது அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா?  இங்குள்ள அடிப்படை பிரச்சினைகளைக் கூட அதிமுக அரசு தீர்க்காமல் உள்ளது.  எங்கள் ஆட்சி அமைந்த உடன் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்

மற்ற கட்சியினரைப் போல் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை தேடி வருபவன் நான் இல்லை.  நான் எப்போதும் மக்களுக்கு துணை நிற்பவன்.  பாஜக தமிழகத்தில் காலூன்றப் பல முயற்சிகள் செய்து வருகின்றது.  ஆனால் அவை எதுவும் பலிக்காது.   சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது” எனப் பேசி உள்ளார்.