அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர்

பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் இன்னல்களுக்கு ஆளானார்கள். 

இப்பஞ்சத்தைத் தீர்க்க என்ன வழி என்று அரசகுருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் தகவல் வந்தது. பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கிச் செல்லவேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்தது. சிவன் அருள் பெற்றது. அதனை பிடித்துவந்தால் நாட்டில் கடும் பஞ்சம் தீரும் என்றது.  

இதனைக்கேட்ட பஞ்சபாண்டவர்கள் வடதிசை நோக்கி அந்த மிருகத்தைப் பிடித்துவரச் சென்றனர். அம்மிருகத்தைப் பிடித்துவரச் சென்றபோது, இவர்களைக் கடுமையாகத் தாக்கியது. இவர்கள் பயந்து திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு இலிங்கம் செய்து வழிபட்டார். அந்த மிருகம் இலிங்கத்தைக் கண்டதும், சிவபக்தியால் சிவலிங்கத்தைச் சுற்றிவந்தது. 

இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின்  ஒன்றாக இலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். 

அந்த மிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றிவந்து கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடந்த மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள இலிங்கம் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதால் இக்கோயிலுக்கு பீமேஸ்வரர் கோயில் என்று பெயர். 

திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை. 

இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை. 

இங்கு சண்டிகேசுவரர், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர், பிரம்மா, நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியே உண்டு. 

திருவிழா:

சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திரு முழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.