திருப்பூர்: அத்திக்கடவு – அவினாசி திட்டம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று தமிழகம் முழுவதும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியில் மனுக்களை பெற்றுக்கொண்ட பின் ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சி முடியும் தருணத்தில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டு இப்போது மக்களை ஏமாற்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. பொய் சொல்வதில் முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிய திட்டம் இல்லை. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது ஆகும். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், அதிமுக ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது. ஊழல் திட்டத்திற்கு மாற்று பெயராக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருநங்கைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.