சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்  தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்த திமுக எம்.பி. ராஜா, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2015ஆம் ஆண்டில்  வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சில முறை ரெய்டு நடைபெற்ற நிலையில், சுமார் ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்தது. .அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

579% சொத்துக்குவிப்பு: திமுக எம்.பி. ஆ.ராசா விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்!