பெற்றோரைக் கவனிக்காத மூன்று பிள்ளைகள் : தூக்கில் தொங்கிய பெற்றோர்
மூன்று பிள்ளைகளைப் பெற்றும் வயோதிகத்தில் தங்களுக்கு ஒரு நேரம் சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை என்கிற விரக்தியில் கணவன் மனைவி இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மச்சக்காளை – பசுபதி தம்பதியினர்.  இவர்களுக்கு மூன்று மகன்கள்.  இவர்கள் மூவருமே திருமணமாகிப் பணி நிமித்தமாக மதுரை, கோவை, சவுதி அரேபியா என வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.  ஆனால் இவர்களின் பெற்றோருக்கு வேண்டியதைச் செய்து தரத் தவறிவிட்டனர்.   மதுரையிலேயே வசித்து வந்த மூன்றாவது மகன் கூட சாப்பாடு போன்ற அன்றாட தேவைகளுக்கு என்று எந்த உதவிக்கும் முன்வராமல் பெற்றோரைத் தவிக்க விட்டுள்ளார்.  இவர்கள் மட்டும் தனியாகவே அவர்கள் வீட்டின் மாடியிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த கொரோனா ஊரடங்கின் போது தினசரி சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்பட்ட நிலையில் விரக்தியடைந்த இந்த தம்பதியினர் நேற்று காலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா