சென்னை:  பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக 10,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இதைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில்,  2 நாட்கள் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

அதன்படி,  வழக்கமாக இயக்கப்பட்டு வரும்,  பேருந்துகளுடன் கூடுதலாக  3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. நாளை (17-ந் தேதி) இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள  31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது,.

இதுதொடர்பாக,  அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய (15ந்தேதி மாலை) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன. இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன.

எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.