பத்திரிகையாளர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சில கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் அளித்த ரஜினிகாந்த், “ஏய்.. இன்னும் கேள்வி இருக்கா” என்று அதிரடி தொனியில் கேட்டுவிட்டுச் சென்றார்.

ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன.

இந்த நிலையில் தனது செயல் எந்த வொரு பத்திரிகையாளர் மனதைப் புண்படுத்தியிருந்தாலும் வருந்துவதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின்போது நான் மிரட்டல் தொனியில் ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்த பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” – இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.