சென்னை: தமிழகஅரசு அமைத்துள்ள சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமுக நீதிக்கண்காணிப்பு குழுவில் மேலும் ஒரு பெண் உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர் சாந்தியை இணைத்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் சாந்தி சமூக சமத்துவத்திற்கான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்திற்கான சமூக நீதி, மகளிர் உரிமை மற்றும் பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் அவர்களை சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் மருத்துவர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

  1. பேராசிரியர் சுப. வீரபாண்டியன்- தலைவர்
  2. முனைவர் கே.தனவேல், இ.ஆ.ப., (ஓய்வு) – உறுப்பினர்
  3. பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் – உறுப்பினர்
  4. கவிஞர் மனுஷ்யபுத்திரன் – உறுப்பினர்
  5. ஏ.ஜெய்சன் – உறுப்பினர்
  6. பேராசிரியர் முனைவர் ஆர்.இராஜேந்திரன் – உறுப்பினர்
  7. கோ.கருணாநிதி – உறுப்பினர்
  8. மருத்துவர் சாந்தி – உறுப்பினர்

மருத்துவர் சாந்தி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது கணவர் ரவீந்திரநாத் சமூக சமத்துவத்திற்கான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். 

மருத்துவம் தொடர்பான பிரச்சினைகள், நியமனங்கள் உள்பட கொரோனா காலக்கட்டத்திலும்,  மத்தியஅரசு தட்டுப்பாடில்லா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கடந்த அதிமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி விவாத மேடைகளில்  இடம்பெற்றவர்.