சென்னை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழைக்காலத்தில் சென்னை நகர் தத்தளிப்பது  வாடிக்கை ஆகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது.

சென்னை சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக, வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.  மாநகராட்சி  அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில்,

”சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம். 

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியைப் பொதுமக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள். 

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாக்க கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்”. 

என்று பதிவிட்டுள்ளார்..