சென்னை: பிப்ரவரி 12ந்தேதி ஞாயிறன்று செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மீது மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொதுவாக விடுமுறை தினங்கள், டிஎன்பிஎஸ்சி,யுபிஎஸ்சி, வங்கி போன்ற பணிக்கான தேர்வுகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பருவத்தேர்வு தேதியை அறிவித்துள்ளது. கடந்த 15ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (பொங்கலன்று)  வங்கி தேர்வுதேதி அறிவிக்கப்பட்டதற்கே, தமிழக எம்.பி.க்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அடாவடியாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் – செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,   பருவத்தேர்வுகள் ஜனவரி 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறைக்கு மாறாக இந்த ஆண்டு அண்ணாபல்கலைக்கழக்ம தேர்வு தேதியை விடுமுறை நாளில் அறிவித்துள்ளது  சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது.