ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்

ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவதலமாகும். அப்பர் பாடல் பெற்ற இக்கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க்காரணம்

குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய் என்பதாகும். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது. கண்டவருக்குக் காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.

தல வரலாறு

முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவற்றுக்காகத் தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்குத் திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார்.

பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி அழகிய திருக்கோயிலைச் சிவபெருமானுக்கு எழுப்பினார். கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியைப் பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி.

சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார். கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடப வாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான்.

கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.  தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழையினைப் பொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார்.

அமைப்பு

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் சொர்ணப்பிள்ளையார், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், உரோமச மகரிஷி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், தட்சிண கைலாசர், கும்பகர்ண பிள்ளையார், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், உத்ர கைலாசர், அருணாசலேஸ்வரர், விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், நடராஜர் தனி சன்னதியில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக மூலவர் சன்னதியின் இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம்மன் சன்னதிக்கு முன்பாக துவார சக்திகள் உள்ளனர்.கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், ஆகியோர் உள்ளனர்.

சிறப்புகள்

சித்திரை 11,12,13 ஆம் தேதிகளில் சூரியக் கதிர்கள் சிவபெருமானை வழிபடுமாறு அமைக்கப்பட்ட திருத்தலம்.  இத்தல அம்பிகை வழிபாடு பெண்களுக்குச் சிறப்பானதாகக் குறிப்பிடப்படுகின்றது.  விசாக நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் தோஷம் இருப்போர் தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்றது.