கோவை:  தேர்தல் விதிகளை மீறி, அதிமுக கொடியுடன் காரில் வந்து வாக்களித்து தொடர்பாக,கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில்,  கார்த்திகேய சிவசேனாபதி  போட்டி யிடுகிறார்.  நேற்று அங்கு  வாக்குப்பதிவை பார்க்க செல்வபுரம் வாக்குச்சாவடிக்கு சென்ற கார்த்திகேய சேனாதிபதியை  அதிமுகவினர் தாக்க முயற்சி செய்து பகிரங்கமாக  மிரட்டல் விடுத்தனர். கார்த்திகேய சேனாதிபதியை வாக்குச்சாவடியை விட்டு  வெளியே வராதபடி உள்ளே வைத்து பூட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவர் கார் மீது கட்டையால் அதிமுகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறந்த  சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை மீட்டு காரில் அனுப்பிவைத்தார்.   இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்தார். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,  கோவை குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில், அதிமுக துண்டு அணிந்து சென்றார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட குனியமுத்தூர் போலீசார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.