கோவை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன். ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை  துறை அமைச்சராக இருந்தவர்.

முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இந் நிலையில் டிசம்பர் 15ம் தேதி உடல்நல குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புகள் இருந்ததால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் மீண்டும் உடல்நிலை மோசமானதால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நோய் தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்று மாலை உயிரிழந்தார்.