ஈரோடு:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுவது அவரது விருப்பம். விஷால் மட்டுமல்ல, எந்த நடிகர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இது அவரவர் விருப்பம். ஆனால் விஷாலால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் மிகவும் சுறுசுறுப்பானவர். மக்கள் பிரச்னைகளை நன்கு அறிந்திருப்பவர். ஆகவே ஆர்.கே.நகர் இடை தேர்தலில் நடிகர் விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு வெற்றி பாதிப்பு இருக்காது. அங்கு மருது கணேஷ் வெற்றி உறுதி’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ ஏற்கெனவே தினகரன் போட்டியிட்டபோது அவருக்காக அப்போது பணத்தை வாரி இரைத்து செலவு செய்தது இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான். ஆகவே இப்போது மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தினகரனின் வேட்பு மனு, அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனுவையும் உடனடியாக தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பிரதமர் மோடியின் செயல்பாட்டால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால், குஜராத் மற்றும் இமாச்சலில் பாஜக மிகப்பெரிய அடியை பெறப் போகிறது’’ என்றார்.