சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே 12ம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியான நிலையில், இன்று  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, நடிகரும், தவெக தலைவருமான விஜயும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள், விரைவில் நாம் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், கடந்த  ஏப்ரல் 6ந்தேதி அன்று  பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 10ந்தேதி) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  தேர்ச்சி பெற்றவர்களுக்கு,  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில்,  தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்!

என கூறியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2023ம் ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.