சென்னை: தமிழ்நாட்டில், 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் உள்பட நாய்களின் தொந்தரவுகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் நாய்களின் கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இதற்கிடையில் சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட 23 வகை நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்தது.

குறிப்பாக  சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியது. அந்த சிறுமிக்கு தற்போது சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்   மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி, தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது.  மேலும், பொது இடங்களுக்கு கூட்டிச்செல்லும்போது, நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முககவசம் அணிவிக்க வேண்டும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

இதுதொடர்பாக நேற்று  தமிழ்நாடு அரசின் கால்நடை துறை வெளியிட்ட அறிக்கையில்,  “06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகோ அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.

நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.