சென்னை: நடிகர் தனுஷ் அடுத்த  48 மணி நேரத்திற்குள் சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் தனுஷின் வெளிநாட்டு கார் தொடர்பான வழக்கை இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நுழைவு வரியில் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், நாளை அல்லது திங்கட்கிழமைக்குள் செலுத்தி விடுவதாகவும், அதனால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும், அல்லது வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, நடிகர் தனுஷுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி என்னவென்று கணக்கிட்டு, இன்று மதியத்திற்குள் வணிக வரித்துறை தனுஷ் தரப்பிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் கணக்கீட்டு அதிகாரி ஆஜராகி எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்றுதெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கியது. அப்போது, வணிக வரித்துறை தரப்பில் தனுஷ் செலுத்த வண்டிய வரிபாக்கி குறித்த விவரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதைடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இது போன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமையாகி என்று கூறியதுடன்,  அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடிகர் தனுஷின் காருக்கான 30.33 லட்சம் வரி பாக்கியை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டு  இருப்பதாகவும், அதற்குள் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கான நுழைவு வரி விலக்கு வழக்கும் முடித்து வைப்பதாக கூறினார்.