சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருக்கோயிலின் ஐந்து அறங்காவலர்களை தற்காலிக நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது. அறங்காவலர்கள் முறைகேட்டில் ஈடபட்டதாக அறநிலையித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஸ்ரீதரன் என்ற அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை உத்தரவுக்கு எதிராக அறங்காவலர்கள் 4 பேருக்கு எதிரான தற்காலிக நீக்கத்திற்கு  ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறி, ஸ்ரீதரனை தற்காலிக நீக்கம் செய்து  செய்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும்,அறநிலையத்துறை, சட்டப்படி விசாரணை நடத்தலாம் என்று அனுமதி வழங்கினார்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை அறநிலையத்துறை யிடம் ஒப்படைக்க வேண்டும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கைகளில், அறநிலையத்துறை  விளம்பரம் வெளியிட வேண்டு மென்றும்,  கோவில் நிலங்களை அபகரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டடார்.

மேலும்,  கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும், அந்த சிறப்பு பிரிவின் தொலைபேசி எண், மொபைல் எண்களை அனைத்து கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களில் பக்தர்கள் புகார் அளிக்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.