‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, ‘தண்ணி வண்டி’, ‘மணியார் குடும்பம்’, சேரன் இயக்கிய ‘திருமணம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள உமாபதி-க்கும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-வுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

ஐஸ்வர்யாவும், உமாபதியும் 2 வருடங்களாக காதலிக்கின்றனர். அவர்களின் காதலை அறிந்த இருவீட்டு பெற்றோர், வரும் தை மாதம் ஐஸ்வர்யா, உமாபதி திருமணம் நடப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து தம்பி ராமய்யா கூறுகையில், “அர்ஜூன் நடத்திய டி.வி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா சென்ற போது உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலில் விழுந்தனர். இதையறிந்த நாங்கள் பச்சைக்கொடி காட்டினோம். வரும் நவம்பர் 8ம் தேதி உமாபதி பிறந்தநாளில், திருமண தேதி குறித்து அறிவிப்போம்” என்றார்.

மேலும், “உமாமதி எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் காட்டும் அக்கறை அர்ஜுனுக்கு பிடித்துள்ளது. எங்கள் மருமகளாக ஐஸ்வர்யாவை வரவேற்க மகிழ்ச்சியோடு காத்து இருக்கிறோம்” என்று நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையா கூறினார்.

‘பட்டத்து யானை’ படத்தில் விஷால் ஜோடியாக தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா தொடர்ந்து தமிழ், கன்னட மொழிகளில் வெளியான ‘சொல்லி விடவா’ படத்திலும் நடித்து இருந்தார்.

உமாபதி தற்போது ‘தேவதாஸ்’ படத்தில் நடித்து வருகிறார், தவிர சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா நடிக்கும் ‘ராஜாக்கிளி’ படத்தை இயக்குகிறார்.