சென்னை

நுகர்வோர் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை விரும்பவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ”ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்குப் பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா?” என்று ஆவின் நிறுவனத்துக்கு ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய  உத்தரவிடப்பட்டு இருந்தது.  இன்று ஆவின் நிர்வாக இயக்குநர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஆவின் அளித்த அறிக்கையில்,

“சென்னை, கோவையில் 7 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது., இதில் 5 இடங்களில் பாலை பாட்டிலுக்குப் பதில் பிளாஸ்டிக் பாக்கெட்டாக வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர் பாலை பாட்டில்களில் விற்பனை செய்தால் விலை உயர்ந்துவிடும் என்பதால், பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பால் எங்களுக்கு போதுமானது என்று தெரிவித்ததானர்

எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில், இதனை ஆய்வு செய்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.