சென்னை:  ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ்,  நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆரூத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கிய அப்பாவி மக்கள்,   ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனைகளால்,  ஆருத்ரா கோல்டு நிறுவனம் சுமார் சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்நிறுவன உரிமையாளர்கள், அதில் கடன்வாங்கியவர் என சுமார்  40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து, இம்மோசடி தொடர்பாக இதுவரை   21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இந்நிறுவன அதிபர் ராஜசேகர் மற்றும், இந்நிறுவனத்தில் கோடிகணக்கில் பணம் வாங்கிவிட்டு, அதை முறையாக கட்டாத திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்பட சிலர் தலைமறைவாகினர். இவர்கள் துபாயில் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.சுரேஷ், காவல்துறை  விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராகாத நிலையில்,  அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி  நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஆர்கே சுரேஷுக்கு எதிராக லுக்கவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து ஆர்கே சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்கவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.  வழக்கின் விசாரணையின்போது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில், நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதாக உறுதி அளிக்கப்பட்டது.

மேலும்,   ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜகேசர் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை தமிழ்நாட்டுக்கு  அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்கின்றனர். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்துவர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் சென்றுள்ள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஆர்கே சுரேஷ் நேற்று துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அதாவது, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார்.அப்போது, அவரிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய நிலையில், மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்கே சுரேஷ் நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி விரசனைக்கு ஆஜராக வந்துள்ளதாக ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.