சென்னை: தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளத தவெக தலைவர் விஜய், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வழங்கினார். இருந்தாலும். பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், விஜய் முதல்வராக பதவி ஏற்பது எப்போது என்பதில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

234 தொகுதிகளைக்கொண்ட தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவிய நிலையில், திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்து களமிறங்கிய தவெக தலைவர் விஜய் கட்சியான தவெக 234 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 108 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையான 118 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில், தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இருந்தாலும், அதிக அளவில் வெற்றிபெற்றுள்ள தவெக, காங்கிரஸ் உள்பட சில கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, திமுக உடனான நட்பை முறித்துக்கொண்டு த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை இன்று அளித்தது. அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 5 பேர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கையெழுத்த கடிதத்தை விஜயிடம் வழங்கினார். இதனால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 6 பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய். அப்போது த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.
இந்த நிலையில் தவெக பதவி ஏற்பு விழா நாளை நடைபெறும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், நாளை பதவியேற்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக 108, காங்கிரஸ் 5 என 113 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய் ஆளுநரிடம் வழங்கிய நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை ஆளுநர் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.