சென்னை: மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் குறித்த  வதங்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.  இதன் காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது பருவமழை காலம் என்பதால், பல நோய்கள் பரவி வருகின்றன. இதனால்,   வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு  காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து,  நவம்பர்  18-ம் தேதி  சென்னை மியாட் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மியாட் மருத்துவமனை நேற்று (நவம்பர் 29ந்தேதி) வெளியிட்ட அறிவிப்புல்,  தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும்  விஜயகாந்த்துக்கு  சில நேரங்களில் தானாக சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, உரிய சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நுரையீரல் உள்ளிட்ட துறைகளின் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 14 நாட்கள் சிகிச்சை பெறுவார் என கூறப்பட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நிலையில், விஜயகாந்த மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டார். அதில்,  விஜயகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஓர் வழக்கமான ஒன்று தான். அதைப் பார்த்து பயப்படவோ,பதற்றப்படவோ தேவையில்லை. விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். எனவே, யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.