திருச்சி: கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட 7 அமைச்சர்களால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் இன்று காலை திறக்கப்பட்டது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 12ந்தேதி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீரான டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்கு பயன்பெற்று கடைமடையை அடையும்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, லம், நாமக்கல், கரூர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வந்தது. தொடர்ந்து காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, காவிரி ஆற்றின் வழியாக முக்கொம்பு மேலணைக்கு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்தது. பின்னர், அதிகாலை 3 மணியளவில் முக்கொம்பு மேலணை பகுதியில் உள்ள 41 மதகுகளின் வழியாக தண்ணீர் திருச்சி நோக்கி திறந்து விடப்பட்டது.

நேற்று காலை 1,800 கன அடி அளவிலான தண்ணீரே முக்கொம்பு காவிரி ஆற்றின் வழியாக  திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கன அடி தண்ணீர் மேலணையில் இருந்து திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நேற்று நள்ளிரவு கல்லணையை வந்தடைந்தது.

இதையடுத்து,  தஞ்சை மாவட்டம்  உள்பட சில பகுதிகளின் டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து  இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரின் வாயிலாக   தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டப் பகுதிகளின் பாசனத்துக்குக் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் பாய்ந்தோடிச் செல்கிறது. இதன்மூலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யநாதன், மா.சுப்பிரமணியன் உள்பட 14  அமைச்சர்கள் பங்கேற்றனங்ர. முக்கிய அமைச்சர்கள்  மதகுகளின் பொத்தானை அழுத்தித் தண்ணீர் திறந்துவிட்டனர்.

கல்லணையில் இருந்து காவிரியில் நொடிக்கு 500 கனஅடி, வெண்ணாற்றில் நொடிக்கு 500 கன அடி, கொள்ளிடத்தில் நொடிக்கு 500 கனஅடி, கல்லணைக் கால்வாயில் நொடிக்கு 500 கன அடி என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 7 மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.