சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்தானது வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (27ந்தேதி) நடைபெறுவதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மேலு 5 வயதுக்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை வழங்கும் நோக்கத்தில் 43,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (27–ந் தேதி) நடைபெறும்தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடையுமாறு கெட்டுக்கொண்டுள்ளார்.

நாளை நடைபெற உள்ள தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில்  சென்னை மாநகரில் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,647 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது. இதனால், இந்த வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்கவேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று, உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தவுடன் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.

ஆகவே, அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் நாளை நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து நாளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு, சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்களின் குழந்தைகளுக்கும், நாளை சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 6,800 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை சென்னை மாநகராட்சியில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து மையங்களின் விவரம்:

சென்னையின் மொத்த மக்கள் தொகை – 78.20 லட்சம்,

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை – 6.68 லட்சம்,

சொட்டுமருந்து மையங்களின் எண்ணிக்கை – 1,442,

பேருந்து நிலையங்கள் மற்றும் இதர மையங்கள் – 162,

நடமாடும் மையங்கள் – 43,

மொத்த மையங்கள் – 1,647.

சென்னை மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.