சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாள் போட்டி இன்று மாலை மாமல்லபுரத்தில் தொடங்கிய நிலையில், முதல் போட்டி இந்தியா, ஜிம்பாப்வே இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  தொடங்கி வைத்தனர். அவர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. இந்திய அணி பிரதமர் மோடி தேர்வு செய்த கருப்பு காய்களுடன் களமிறங்கினர். ஜிம்பாப்வே அணியினர் வெள்ளைக்காய்களுடன் களமிறங்கி உள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டியை  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்த நிலையில், இன்று மாலை போட்டியும் தொடங்கி யுள்ளது. 11 சுற்றுகளை கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் போட்டியில் இந்திய 1(ஏ) அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் பங்கேற்று உள்ளனர். முதல் சுற்று போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.